
சர்வதேச வர்த்தக மற்றும் உபாயமார்க்க அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்ரமவின் செயற்பாடுகள் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முகத்திற்கு முகமாக அவரிடம் அதிருப்தி வெளியிட்டுள்ளதோடு கடும் எச்சரிக்கையையும் வழங்கியிருக்கின்றார்.
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் தொடர்பாக அலரிமாளிகையில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்த அமைச்சர் மலிக் சமரவிக்ரமவிற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தனது கடுமையான எச்சரிக்கையை வழங்கியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்கு எந்தவித அழைப்புமின்றி கபீர் ஹாஷிமுடன் மலிக் சரமவிக்ரம வந்திருந்ததோடு, ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரான அமைச்சர் ரவி கருணாநாயக்க குறித்து பிரதமரிடம் எதிர்மறையான விமர்சனத்தை முன்வைத்திருந்த நிலையில் பிரதமரிடம் கடும் எச்சரிக்கையை பெற்றுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்திருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உம்மைப்போல தேசிய பட்டியலில் அமைச்சர் ரவி கருணாநாயக்க நாடாளுமன்றத்திற்குள் பிரவேகிக்கவில்லை. மாறாக கொழும்பு மாவட்ட மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு அனைத்துப் பிரச்சினைகளிலும் தலையீடு செய்யவும், கருத்துக்களைக் கூறவும் உரிமையிருக்கிறது என்று கூறியுள்ளார்.
அதேபோல இந்தப் பேச்சுவார்த்தைக்கு அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு மட்டுமே அழைப்பு விடுத்திருப்பதாக மறைமுக தாக்குதல் ஒன்றை மலிக் சமரவிக்ரம மற்றும் கபீர் ஹாஷிம் மீது மேற்கொண்ட பிரதமர், பேச்சுவார்த்தை செய்ய தனித்து வரும்படி அழைத்திருந்த நிலையில், கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத காரணத்தினாலேயா இவ்வாறு கூட்டமாக வந்திருக்கிறீர்கள் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவிடம் பிரதமர் வினவியுள்ளார்.
Lanka Newsweek © 2026